டாஸ்மாக்கில் கட்டணக் கொள்ளை: ரகசியப் பட்டியலைத் தயாரித்த உளவுத்துறை - அரசுக்கு அவசரப் பரிந்துரை!

 
டாஸ்மாக் டாஸ்மாக்

தமிழகத்தில் நீண்ட காலப் பெருங்குறையாக நிலவி வரும் டாஸ்மாக் கடைகளின் கூடுதல் கட்டண வசூலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உளவுத்துறை களம் இறங்கியுள்ளது. தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு, நிர்வாகச் சீர்திருத்தங்களில் அசுர வேகம் காட்டி வரும் நிலையில், டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலிக்கும் ஊழியர்களின் ரகசியப் பட்டியலை உளவுத்துறை அதிரடியாகத் தயாரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு டாஸ்மாக் கடைகளில், அசைக்க முடியாத விதியாக மது பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தரப்பில் தொடர்ச்சியாகப் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து, முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடி உத்தரவின் பேரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் உளவுத்துறை போலீசார் கடந்த சில நாட்களாக ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

சக்கைபோடு போட்ட தீபாவளி சேல்ஸ்!! மண்டலம் வாரியாக டாஸ்மாக் விற்பனை பட்டியல்!!

இந்த அதிரடி ஆய்வுகளின் முடிவில், தமிழகம் முழுவதும் அதிக விலைக்கு மது விற்பனை செய்யும் குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் அதற்குத் துணை போகும் கடை மேற்பார்வையாளர்கள் , விற்பனையாளர்களின் முழுமையான பட்டியலை உளவுத்துறை துல்லியமாகத் தயாரித்து, டாஸ்மாக் மேலாண் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அவசரமாக அனுப்பியுள்ளது. இந்த ரகசிய அறிக்கையின் அடிப்படையில், தவறு செய்த கடை ஊழியர்கள் மீது உடனடியாக சஸ்பெண்ட் உள்ளிட்ட கடுமையான துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் எனத் தெரிகிறது. அதிக விலை விற்பனைத் தவிர, இந்த ரகசிய அறிக்கையில் மேலும் இரண்டு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு மிக அருகாமையில் விதிகளை மீறி இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளின் முழுமையான விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குடிமகன்களின் மோதல்களால் அடிக்கடி சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை மற்றும் பொதுமக்களுக்கு அசுர அச்சுறுத்தல் ஏற்படும் கடைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

டாஸ்மாக் மது

இந்த இரண்டு பிரிவுகளின் கீழ் வரும் கடைகளை உடனடியாக மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யவோ அல்லது நிரந்தரமாக மூடவோ தவெக அரசு திட்டமிட்டுள்ளது. உளவுத்துறையின் இந்த அதிரடிப் பாய்ச்சல், டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த பார் உரிமையாளர்கள் மத்தியில் அசுர கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.