சென்னையில் பரபரப்பு.. தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் மயங்கி விழுந்த ஆசிரியர்கள்..!
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை சரிசெய்ய வலியுறுத்தி கடந்த 14 ஆண்டுகளாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடை நிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த3 நாட்களாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடந்து வருகிறது.
ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் டி.பி.ஐ வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது. அங்கு பாதுகாப்புக்காக காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் மயக்கம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், முதலுதவி பணிகளுக்காக டி.பி.ஐ வளாகத்திலேயே தற்காலிகமாக மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டிபிஐ வளாகத்தின் மற்றொரு பகுதியில் பணி நிரந்தரம் கோரி தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் மற்றும் ஒருங்கிை ணைந்த சிறப்பாசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்த பகுதிநேர சிறப்பாசிரியர்களும், டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முன்வைத்து 2013-ம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் டிஎன் பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் டிபிஐ வளாகத்தில் தொடங்கப்பட உள்ளது. விடா மழையிலும் தொடர்ந்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றது. மேலும் பள்ளி மாணவர்கள் காலாண்டு விடுமுறை முடித்து 3 ஆம் தேதி பள்ளி திறக்க உள்ள நிலையில் ஆசிரியர்கள் போராடி வருவது அரசுக்கு நெருக்கடியை உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.