தென்காசி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் திடீர் திருப்பம்... எஸ்.ஐ. இசக்கிராஜாவுடன் டூ வீலரில் போறது யாருன்னு பாருங்க!? அதிர வைத்த சிசிடிவி!

 
கள் கள்

தென்காசி மாவட்டம் மருதம்புத்தூரைச் சேர்ந்த பனை விவசாயி மணிகண்டன் (32) என்பவர் மீது, ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் (SI) இசக்கிராஜா துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்தது. இந்த விவகாரத்தில் காவல்துறையின் தரப்புக்கும், பாதிக்கப்பட்ட மணிகண்டன் தரப்புக்கும் இடையே முரண்பட்ட கருத்துகள் நிலவி வந்த நிலையில், புதிய சிசிடிவி ஆதாரம் வெளியாகியுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சிசிடிவி பதிவில், சம்பவத்தன்று மணிகண்டன் தனது இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்ல, அவருக்குப் பின்னால் எஸ்.ஐ இசக்கிராஜா மஃப்டியில் (சாதாரண உடையில்) அமர்ந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆதாரத்தின் மூலம் தெரியவரும் முக்கிய உண்மைகள்:

கள் இறக்கவில்லை:

மணிகண்டன் தனது தோட்டத்தில் கள் இறக்கிக் கொண்டிருந்தபோது பிடிபட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் தனது வீட்டிலிருந்தே போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்டது உறுதியாகியுள்ளது.

முன்கூட்டியே திட்டம்:

எஸ்.ஐ இசக்கிராஜா மஃப்டியில் சென்று மணிகண்டனை அவரது தோட்டத்திற்கு அழைத்துச் சென்றது, இந்தச் சம்பவம் தற்செயலாக நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

கள்

காவல்துறை தரப்பு:

மணிகண்டன் தன்னை கம்பால் தாக்கியதாகவும், தற்காப்பிற்காகவே தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் நான்கு முறை சுட்டதாகவும் இசக்கிராஜா தரப்பு கூறியது.

இசக்கிராஜா சாதிப் பெயரைச் சொல்லித் திட்டியதாகவும், மணிகண்டனின் தம்பி மகனை (16 வயது சிறுவன்) தாக்கியதைக் கண்டு தடுக்க முயன்றபோது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் மணிகண்டன் தரப்பு குற்றம் சாட்டியது.

இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் மருதம்புத்தூர் கிராம மக்கள் நீதி கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி எஸ்.ஐ. கள்

மணிகண்டனின் தம்பி மகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்.ஐ இசக்கிராஜா மற்றும் அவருடன் சென்ற இரண்டு காவலர்கள் மீது கொலை முயற்சி (Section 307) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி ஆதாரங்கள் மற்றும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் இசக்கிராஜா ஏற்கனவே பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார்.

இரு கால்களிலும் குண்டுகள் துளைத்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மணிகண்டனிடம், மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றுள்ளார். சிசிடிவி காட்சி வெளியானதைத் தொடர்ந்து, காவல்துறையினர் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.