பதற்றம்.. திருச்சி சிறையில் ஒரே நாளில் 2 கைதிகள் திடீர் மரணம் !!

 
திருச்சி மத்திய சிறை

திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (75). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் மீது 2013ஆம் ஆண்டு தஞ்சை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அவருக்கு15 நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாள் காவல் முடிந்து அவர் வெளியே வருவதற்கு ஆயத்தமாகி வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கடந்த 9ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறை போலீஸார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  அங்கே அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக நேற்று இரவு உயிரிழந்தார். 

திருச்சி மத்திய சிறை

இதுகுறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி கண்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கே.கே.நகர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோல், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சதீஷ் என்கிற ஸ்டீபன். இவர் ஒரு வழக்கில் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறை வளாகத்தில் கடந்த 6ஆம் தேதியன்று குளித்துக் கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டது.

திருச்சி மத்திய சிறை

இதனால் கீழே விழுந்த அவரை சிறை காவலர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருச்சி சிறையில் இரண்டு கைதிகள் ஒரே நாளில் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web