தென்காசியில் பரபரப்பு... வெட்டுக்காயங்களுடன் ஓடையில் பிணமாக இருந்த இளைஞர்!
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே ஒருவர் வெட்டு காயங்களுடன் கிடந்துள்ளார். அந்த வழியே நடந்து சென்றவர்கள், ஓடைப் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் கிடந்த நபரைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, புளியங்குடி காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் இருந்தவர் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பதும், அதே பகுதியில் டீக்கடை ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உடலில் பல்வேறு இடங்களில் வெட்டு காயங்கள் இருப்பதால் மாரியப்பன் கொலை செய்யப்பட்டாரா? கொலைக்கான காரணங்கள் என்ன? என்பது குறித்தும் கொலை செய்த மர்ம நபர்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். புளியங்குடி பகுதியில் டீ மாஸ்டர் ஒருவர் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.