பயங்கரம்...கோவில் சுவர் இடிந்து விழுந்து 6 பக்தர்கள் பலி,14 பேர் படுகாயம்!

 
suvar suvar

 

மகாராஷ்டிரா மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக, கோவில் ஒன்றின் சுவர் மற்றும் தகரக் கூரைகள் இடிந்து விழுந்ததில் 6 பக்தர்கள் உயிரிழந்தனர். ஜாத் தாலுக்காவிற்கு உட்பட்ட மோதேவாடி கிராமத்தில் உள்ள மர்குதேவி கோவிலில் நேற்று (மே 12) மாலை இந்தத் துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. செவ்வாய்க்கிழமை என்பதால் கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை சுமார் 5 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்துள்ளது. அப்போது, சுமார் 350-க்கும் மேற்பட்ட பக்தர்கள் மழையிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளக் கோவிலின் ஒரு பகுதியில் இருந்த கட்டுமானச் சுவர் மற்றும் தகரக் கூரையின் கீழ் ஒதுங்கியுள்ளனர். பலத்த காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல், தகரக் கூரைகள் பெயர்ந்து விழுந்ததில் அருகில் இருந்த கல் சுவரும் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 14-க்கும் மேற்பட்ட பக்தர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 3 பேர் உள்ளூர்வாசிகள் என்றும், மற்றவர்கள் கர்நாடகாவின் பிஜாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.