கிளாம்பாக்கத்தில் பயங்கரம்.. புதுப்பெண்ணிடம் ஆபாசமாகப் பேசிய இளைஞர் - தட்டிக்கேட்ட கணவர் மீது கொடூரத் தாக்குதல்!
சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டுப் பேருந்து நிலையத்தில், தனது கணவருடன் பேருந்துக்காகக் காத்திருந்த புதுமணப் பெண் ஒருவரிடம் இளைஞர் ஒருவர் மிக மோசமாக அத்துமீறியுள்ளார். பாதிக்கப்பட்ட தம்பதியினர் தங்களது ஊருக்குச் செல்வதற்காகப் பேருந்து நிலைய வளாகத்தில் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த பாலா என்ற இளைஞர் கடுமையான மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தம்பதியரின் அருகே வந்த பாலா, கணவன் என்றும் பாராமல் அவரது எதிரிலேயே அந்தப் புதுமணப் பெண்ணிடம் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி வம்பு இழுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் உடனடியாக எழுந்து அந்த வாலிபரின் செயலைத் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த போதை வாலிபர் பாலா, அந்தப் புதுமாப்பிள்ளையைக் கண்டபடி தாக்கியுள்ளார்.
பேருந்து நிலையத்தில் கணவன், மனைவி இருவரும் போதை வாலிபரால் அச்சுறுத்தப்படுவதைக் கண்டு அங்குப் பேருந்துக்காகக் காத்திருந்த சக பயணிகள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

அட்டூழியம் செய்த வாலிபர் பாலாவைச் சூழ்ந்து பிடித்துக் கொண்ட பயணிகள், உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த கிளாம்பாக்கம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்து போதை ஆசாமி பாலாவை மீட்டு கைது செய்தனர்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்குள்ளேயே, கணவனின் எதிரில் புதுப்பெண்ணிடம் ஆபாசமாகப் பேசித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த சம்பவம், அங்குப் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது.
