இன்ஸ்டாகிராம் செயலிக்கு மத்திய அரசு நோட்டீஸ்... 7 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு!

 
இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் செயலி, இப்போதைய தலைமுறை குழந்தைகளித்திலும், மாணவர்கள், இளம்பெண்கள், இல்லத்தரசிகள் என்று ரீல்ஸ் மோகத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்ஸ்டாவில் குழந்தைகளைப் பாலியல் ரீதியாகச் சுரண்டும் மற்றும் அவர்களுக்கு எதிரான ஆபாச விளம்பரங்கள் வெளியாவது தொடர்பாக மத்திய அரசு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகைய விளம்பரங்களை உடனடியாகத் தளத்திலிருந்து முழுமையாக நீக்கக் கோரி இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் தேசியக் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை இணைந்து இந்த விதிகளின் கீழ் நோட்டீஸை அனுப்பியுள்ளன.

இன்ஸ்டாகிராம் தளத்தில் கண்டறியப்பட்டுள்ள குழந்தைகளுக்கு எதிரான விளம்பரங்களை உடனடியாக நீக்குவதுடன், இது தொடர்பாக அடுத்த 7 நாட்களுக்குள் விரிவான மற்றும் முழுமையான விளக்க அறிக்கை ஒன்றை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்

இந்தியத் தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்திற்குள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, விளக்கமளிக்கத் தவறும்பட்சத்தில், இன்ஸ்டாகிராம் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புப் பிரிவு 79-ன் கீழ் உள்ள விலக்குகள் ரத்து செய்யப்பட்டு, நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீது கடுமையான கிரிமினல் நடவடிக்கைகள் பாயும் என மத்திய அரசு வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

சமீபகாலமாகச் சமூக வலைத்தளங்களில் குழந்தைகளைக் குறிவைத்துத் தோன்றும் தேவையற்ற பாலியல் விளம்பரங்கள் மற்றும் அல்காரிதம் குறைபாடுகள் காரணமாகப் பல்வேறு தரப்பிலிருந்தும் புகார்கள் குவிந்து வந்தன.

செல்போன் சிறுவர்கள்

"இணையவெளியில் குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய அரசு எவ்வித சமரசமும் செய்து கொள்ளாது. சமூக வலைத்தளத் தளங்கள் தங்களது லாபத்திற்காகக் குழந்தைகளின் உரிமைகளையும் பாதுகாப்பையும் அடகு வைக்க அனுமதிக்க முடியாது" என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் இந்த மற்றும் கடுமையான உத்தரவு, இணையப் பாதுகாப்பு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நோட்டீஸைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராம் தளம் தனது விளம்பரக் கொள்கைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வடிகட்டிகளை மாற்றி அமைப்பதற்கான தீவிரப் பணிகளில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.