தனியே வசித்த தந்தை போதையில் மரணம்... உடலை வாங்க மறுத்து செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்த மகள்!

 
போதை
 


காஞ்சிபுரம் மாவட்டம் கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியே வசித்து வந்த தந்தை, போதைக்கு அடிமையான நிலையில், வீட்டில் உயிரிழந்த நிலையில், தந்தையின் சடலத்தை வாங்க மறுத்து சொந்த மகள் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

கிழக்கு தாம்பரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 49 வயதுடைய ஆண் ஒருவர் வாடகைக்கு வசித்து வந்துள்ளார். தனியார் ஐடி நிறுவனத்தில் வேலைப் பார்த்து வந்த இவருக்கு திருமணமாகி ஒரு மகள் இருக்கிறார். 

ஆம்புலன்ஸ்

இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற நிலையில், தந்தையுடன் வசித்து வந்த மகளும் கல்லூரி படிப்பை முடித்த நிலையில், தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரிந்து சென்று பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். 

இந்நிலையில் மனைவியும், மகளும் இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ள அவர் கடந்த ஐந்து மாதங்களாக வேலைக்கும் செல்லாமல்   மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி, எந்நேரமும் போதையில் இருந்து வந்த நிலையில், நேற்று அடுக்குமாடி குடியிருப்பின் பார்க்கிங் பகுதியில் போதையில் விழுந்து கிடந்துள்ளார். 

அபார்ட்மெண்ட் குடியிருப்புவாசிகள் அவரை மீட்டு அவரது வீட்டிற்குள் விட்டுள்ளனர். பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள், இது குறித்து வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த வீட்டு உரிமையாளர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ பணியாளர்கள் வீட்டிற்குள் சென்று அவரைப் பரிசோதித்து பார்த்ததில், அவர் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது. 

உத்தரபிரதேச போலீஸ்

இது குறித்து தகவல் அறிந்த சேலையூர் காவல் நிலைய போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் உயிரிழந்தது குறித்து அவரது மகள் மற்றும் மாமியாரை தொடர்பு கொண்டு போலீசார் தகவல் தெரிவித்த நிலையில், தனக்கு அப்பா தேவையில்லை எனக் கூறி மகள் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். மேலும், தந்தையின் உடலை ஒப்படைக்க மகளை தேடி வருகின்றனர். மனைவியை பிரிந்து, மகளையும் பிரிந்து மது போதைக்கு அடிமையான நிலையில் உயிரிழந்த தந்தையின் உடலைப் பெற மகள் உள்ளிட்ட உறவினர்கள் மறுத்து விட்ட சம்பவம் அந்த குடியிருப்புவாசிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.