லொக்கேஷனை மாற்றி போலீசை குழப்பிய பிரபல ரவுடி.. ப்ளாண் போட்டு பக்கவாக கைது செய்து அதிரடி..!
சென்னை ஜெஜெ நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பாடி குப்பத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி டேனியல். 29 வயதாகிறது. இவர் மீது மூன்றுக்கும் மேற்பட்ட கொலை வழக்குகள், கொலை முயற்சி வழக்குகள் ஏற்கனவே உள்ளன. இதுதவிர சென்னை ராஜமங்கலம், நொளம்பூர், ஜேஜே நகர் உள்ளிட்ட இடங்களிலும் ரவுடி டேனியல் மீது கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. தொடர் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய இவர், 2019 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனையடுத்து இவரைப் பிடிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. கடந்த 7 மாதமாக தலைமறைவாக இருந்த ரவுடி டேனியலை, தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். இதனடிப்படையில் ரவுடி டேனியல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தலைமறைவாக இருந்ததை தனிப்படை காவல்துறை கண்டுபிடித்தது. உடனடியாக திருமங்கலம் காவல் உதவி ஆணையர் வரதராஜன், ஆய்வாளர்கள் ஜார்ஜ் மில்லர், சூரியலிங்கம் தலைமையிலான 10 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.
சுமார் நான்கு நாட்களாக ரவுடி டேனியலை தீவிரமாக கண்காணித்த காவல்துறை நேற்றிரவு சுற்றிவளைத்து துப்பாக்கி முனையில் கைது செய்தனர். தற்போது அண்ணா நகர் காவல் மாவட்டம் நொளம்பூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரவடி டேனியல் 2019 ஆம் ஆண்டு கொலை வழக்கில் 21.03.23 முதல் தேடப்படும் குற்றவாளி ஆவார். A கேட்டகிரி ரவுடியான இவர், சென்னை JJ நகர் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியும் ஆவார். இவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினரை சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வெகுவாக பாராட்டினார்.
மேலும் காஞ்சிபுரத்தில் என்கவுண்டரில் சுடப்பட்ட ரவுடி விஷ்வாவின் நெருங்கிய நண்பரும் அவரது கூட்டாளியுமாக இருந்தவர் பிரபல ரவுடி டேனியல்.
இவர் தான் பிரத்யேகமாக பயன்படுத்தி வந்த வெளிநாட்டு ஐபோன் ஆப் மூலமாக பேசும் இடத்தை மாற்றி மாற்றி காவல்துறைக்கு சவாலாக இருந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட நொளம்பூர் காவல்துறை, ரவுடி டேனியலை திட்டமிட்டு கைது செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.