”பிரம்மாண்டத்தின் பிரம்மாண்டம்”.. கட்டப்பட்ட மிகப்பெரிய இந்துக்கோவில்.. இந்தியாவில் இல்லை..!
அமெரிக்க நியூயார்க்கின் டைம்ஸ் சதுக்கத்திலிருந்து 90 கிமீ தொலைவில், சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோயிலின் அமைவிடம் உள்ளது. இந்து வேதங்களின் வழிகாட்டுதல்கள், வைதீக நடைமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கி, சகலத்திலும் பண்டைய இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நோக்கில் இக்கோயில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதான கோயில், 12 உப கோயில்கள், ஒன்பது கோபுர கட்டமைப்புகள் ஆகியவை 183 ஏக்கர் பரப்பளவிலான இந்த கோயில் வளாகத்தில் அடங்கியிருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட பளிங்கு, கிரானைட் மட்டுமன்றி, கடுமையான வெப்பத்தையும், குளிரையும் தாங்கும் வகையிலான சுண்ணாம்பு மற்றும் இளஞ்சிவப்பு மணற்கல் உள்ளிட்டவையும் கோயில் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வகையில் சுமார் 20 லட்சம் கனஅடி கற்கள் கட்டுமானத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றில் பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்கு கல், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் ஆகியவை தருவிக்கப்பட்டுள்ளன. இன்று அக்டோபர் 8ம் தேதி குடமுழுக்கு காணும் இந்த கோயில், அக்டோபர் 18ம் தேதி முதல் பக்தர்களின் தரிசனத்துக்கு திறக்கப்பட இருக்கிறது.
மிகப் பிரம்மாண்டமான இந்துக் கோவில் ஒன்று இந்தியாவை தவிர்த்து வேறு நாட்டில் கட்டப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.