ஏ.டி.எம்மில் பணம் நிரப்ப சென்ற போது பயங்கரம்.. கார் கண்ணாடியை உடைத்து 22 லட்சம் அபேஸ்..!!
ஏ.டி.எம்மில் நிரப்ப பணம் எடுத்து சென்ற போது மர்ம நபர்கள் தாக்கி 22 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பகுதியில் தனியார் ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் ஏ.டி.எம் நிறுவனங்கள் பணம் நிரப்பி வருகின்றனர். இந்த நிலையில் இன்று, மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கியில் இந்தியா 1 வங்கியின் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக, மதுராந்தகம் பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து, 94 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு 2 ஊழியர்கள் காரில் மதுராந்தகத்தில் உள்ள செங்குந்தர் பேட்டை கடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள இரு ATM மில் பணத்தை நிரப்பி உள்ளனர்.
இதனையடுத்து கடைசியாக மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ATM மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த பொழுது , அவர்கள் காரில் இருந்த 22 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் காரின் , பின்புறம் உள்ள கண்ணாடிய உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றி மர்ம நபர்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். ஏடிஎம்களில் பணம் நிரப்புவது வழக்கமாக நடைபெறக்கூடிய பணி என்பதால் திட்டமிட்டு இந்த திருட்டு சம்பவம் நடைபெற்று இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் முதலில் இரண்டு ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பொழுதும் இவர்களை யாராவது பின் தொடர்ந்தார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பகலில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.