குளத்தின் அருகே இறந்து கிடந்த கட்டிடத் தொழிலாளி.. மர்ம மரணமாக வழக்கு பதிந்த காவல்துறை..!!

 
சுரேஷ்

குளத்தின் அருகே கட்டிட தொழிலாளி சடலமாக கண்டெடுகப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர் கட்டிட காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்.  இந்த நிலையில்  நெல்லை மாவட்டம் பிராஞ்சேரி குளத்தின் அருகே அவர் சடலமாக இருந்துள்ளார்.  அந்த வழியாக சென்றவர்கள் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்த முன்னீர் பள்ளம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர், அப்போது அங்கிருந்தவர்கள் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து, உடலிலிருந்து அதிக அளவு இரத்தம் வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து அவரை மீட்ட காவல்துறையினர் அவர் உயிரிழந்திருந்ததையும், அவர் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததையும் அறிந்தனர். தொடர்ந்து உடலை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் உடலில் பல்வேறு பகுதிகளில் வெட்டுக்காயங்கள் இருந்த நிலையில் இது கொலையாக இருக்கலாம் என சந்தேகித்த காவல்துறையினர் அதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சுரேஷ் உயிரிழந்தது தொடர்பான இரு வேறு தகவல்களால் பிராஞ்சேரி பகுதியில் பதட்டமான சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். சுரேஷ் எதற்காக கொலை செய்யப்பட்டார்? ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோபாலசமுத்திரம் பகுதியில் காவல்துறையினர் முகாமிட்டு சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.  சுரேஷ் சந்தேகமான முறையில் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   

From around the web