'சிங்கப்பெண்’ திட்டம்... நாளை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்!
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்யவும், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்துக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் மிக முக்கியப் பகுதியாக, தமிழக வெற்றிக் கழக அரசின் புதிய முயற்சியான ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை முறைப்படி தொடங்கி வைக்கிறார். தேர்தல் வாக்குறுதியில் அளிக்கப்பட்டிருந்த இத்திட்டம், தற்போது அரசாணையாக மாற்றப்பட்டு மிகத் துரிதமாகச் செயல்பாட்டிற்கு வருவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நாளை மே 27ம் தேதி சென்னையில் நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் விஜய் இந்தச் சிறப்புப் படையின் சேவைகளைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்க உள்ளார். இச்சிறப்பு அதிரடிப்படையினரின் 24 மணி நேரத் தீவிர ரோந்துப் பணிகளுக்காக, முதற்கட்டமாக 30 நவீன அதிநவீன ரோந்து வாகனங்கள் அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் நேரடிப் பார்வை: பெண்களுக்கான அவசரக் காலப் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்தல், பாதிக்கப்பட்டவர்களை மீட்டுக் கவுன்சிலிங் வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும் இச்சிறப்புப் படை, முதலமைச்சரின் நேரடிப் பார்வையின் கீழ் இயங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பள்ளி, கல்லூரி வளாகங்கள், பேருந்து நிலையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வணிகப் பகுதிகளில் இந்தச் சிங்கப்பெண் அதிரடிப்படை வாகனங்கள் சுழற்சி முறையில் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளன.

பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டால் மிகத் துரிதமாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் அவசரக் கட்டுப்பாட்டு அறைத் தொடர்புகள் இணைக்கப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்கு உற்ற துணையாக அமையவுள்ள தவெக அரசின் இந்த சிங்கப்பெண் திட்டம், தமிழகப் பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் நிம்மதியையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
