“நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்; கைவிட மாட்டான்” - விஜய்க்கு ஆதரவாக வெங்கட் பிரபு உருக்கம்!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள போதிலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் பெரும் அரசியல் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கிடையே, திமுக ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைக்கப் போவதாகத் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவி வருவது தவெக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், பிரபலத் திரைப்பட இயக்குநர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ள கருத்து இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்ஃபிடென்டா இருப்போம்
— venkat prabhu (@vp_offl) May 6, 2026
"நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்!!! நல்லதே நடக்கும்.. கான்பிடென்டா இருப்போம்" என அந்தப் பதிவில் வெங்கட் பிரபு குறிப்பிட்டுள்ளார். அரசியல் களத்தில் அடுத்தடுத்து நிகழும் அதிரடி மாற்றங்களால் தவெக தரப்பு சோர்வடைந்துள்ள நிலையில், அவருக்கு நெருக்கமானவர்களின் இத்தகைய ஆதரவு குரல்கள் அக்கட்சியினருக்குப் புதிய உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. ரஜினிகாந்த் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்புக்குப் பிறகு அதிமுக - திமுக கூட்டணி குறித்த பேச்சுகள் பலமாக அடிபடும் வேளையில், வெங்கட் பிரபுவின் இந்தப் பதிவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் ஒரு நிலையான ஆட்சி அமையுமா அல்லது ஆளுநரின் முடிவால் மீண்டும் தேர்தல் வருமா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. தவெக தலைவர் விஜய் 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தாலும், சட்ட ரீதியான சிக்கல்கள் முட்டுக்கட்டையாக உள்ளன. இத்தகைய நெருக்கடியான நேரத்தில், நல்லவர்களுக்குக் கடவுள் துணையாக இருப்பார் என்ற வெங்கட் பிரபுவின் பதிவு, விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.
