தலைமறைவாக இருந்த முக்கிய ரெளடி.. 5 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா பாணியில் கைது செய்த போலீசார்.!!

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் மதன் (35). இவர் மீது 3 கொலை, 12 கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கொலை வழக்கு ஒன்றில் கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க காசிமேடு தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி மதனின் செல்போன் சிக்னல்களை வைத்து ஆய்வு செய்த போது கிண்டி வழியாக ஆட்டோவில் சென்றுக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் ரவுடியை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது பட்டினப்பாக்கம் அருகே ஆட்டோவில் சென்றவரை போலீசார் மடக்கி பிடிக்க முயற்சித்தனர்.
அப்போது, மதன் சிறிய கத்தியால் தன்னையே குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றது மட்டுமல்லாமல் மாநகர பேருந்து டயருக்கு அடியில் கழுத்தை வைத்துக்கொண்டு போலீசாரை மிரட்டினார். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பொதுமக்கள் உதவியுடன் அவரை போலீசார் கைது செய்து ஆட்டோவில் ஏற்றி காசிமேடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட காசிமேடு மதன் சிறையில் அடைக்கப்பட்டார்.