சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்.. பயிற்சி மருத்துவர் அதிரடியாக சஸ்பெண்ட்...!!
இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரை நிர்வாகம் இடை நீக்கம் செய்துள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர், உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதனை செய்த மருத்தவர்கள் ஸ்கேன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர். அதன் அடிப்படையில் அந்தப் பெண் ஸ்கேன் எடுப்பதற்கு ஸ்கேன் எடுக்கும் அறைக்கு சென்றுள்ளார்.
ஸ்கேன் எடுக்கும் பொழுது முதுநிலை மருத்துவம் படிக்கும் பயிற்சி மருத்துவர் கோகுல் என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அப்பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவ குழு, விசாரணை அடிப்படையில் மருத்துவர் கோகுலை 2 வாரங்களுக்கு இடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவின் பேரில் கோகுல் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து புகாரின் பேரில் மருத்துவர் கோகுலை அழைத்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டு அவர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மருத்துவரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.