முடிவுக்கு வருகிறது பிரபல ஹோட்டலின் ஆயுட்காலம்.. இழுத்து மூடப்படும் அடையார் கேட் ஹொட்டல்.!!.
மிகவும் பிரபலமான, பழமையான நட்சத்திர விடுதியான கிரவுன் பிளாசா மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை ஆழ்வார்பேட்டை சேமியர்ஸ் சாலையில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரபலமான, பழமையான நட்சத்திர விடுதிகளில் அடையார் கேட் என அழைக்கப்படும் கிரவுன் பிளாசா நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. தொழிலதிபரான T.T.வாசு அடையார் கேட் எனும் பெயரில் முதன் முதலில் ஹோட்டல் தொடங்கினார். இதனையடுத்து இந்த ஹோட்டலை கோயல் குழுமம் வாங்கியது. அதன் பின்னர், இதை வாங்கிய பிரபல ஐடிசி நிறுவனம், பார்க் ஷெரட்டன் எனவும், பின்னர் கிரவுன் பிளாசா எனவும் பெயரை மாற்றியது. எத்தனை பெயர்கள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், இன்றளவும் நட்சத்திர விடுதி அமைந்துள்ள பகுதியை அடையார் கேட் என்றே அழைக்கப்படுகிறது.
இந்த நட்சத்திர விடுதியில், 287 அறைகள் உள்ளன. பல தமிழ் திரைப்படங்களின் சூட்டிங் இங்கு நடைபெற்றுள்ளது. மேலும் உலக தலைவர்கள், போப் ஆண்டவர், இந்திய அரசியல் தலைவர்கள் , இந்திய கிரிக்கெட் அணி உட்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வீரர்கள் என பலரும் இந்த விடுதியில் தங்கியுள்ளனர். அதே நேரத்தில் இந்த விடுதியில் தான் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், இந்த நட்சத்திர விடுதியை பாஷ்யம் எனும் கட்டுமான நிறுவனம் வாங்கியுள்ளதாகவும், விடுதி இடிக்கப்பட்டு சுமார் 130 சொகுசு வீடுகள் கொண்ட சொகுசு வீடுகள் கட்டப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு சொகுசு வீடு சதுர அடிக்கு ரூபாய் 50 ஆயிரம் வரை வீதம் விலை நிர்ணயம் செய்ய வாய்ப்புள்ளதாகவும், அதன்படி ஒரு வீடு குறைந்தபட்சம் ரூ.15 கோடியில் இருந்து அதிகபட்சம் 20 கோடி வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.