அதிமுகவில் அடுத்த அதிர்ச்சி... பொறுப்பில் இருந்து கல்யாண சுந்தரம் விலகல்!

 
கல்யாண சுந்தரம் அதிமுக கல்யாண சுந்தரம் அதிமுக

அதிமுக-வின் கொள்கைப் பரப்பு மற்றும் செய்தித் தொடர்பாளராக அறியப்படும் கல்யாண சுந்தரம், அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது புரட்சித்தலைவி அம்மா'வின் ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

தனது பதவி விலகல் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கல்யாண சுந்தரம், "நமது புரட்சித்தலைவி அம்மா நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த காலம் முழுவதும் எனக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுத்த நிர்வாகிகள் மற்றும் சக தோழர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவர் எடுத்துள்ள இந்த முடிவு, கட்சி வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி

அதிமுக தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி என இரண்டு அணிகளாகப் பிரிந்துள்ள நிலையில், இந்த விலகல் முக்கியத்துவம் பெறுகிறது. கல்யாண சுந்தரம் கோவையைச் சேர்ந்தவர் என்பதால், அவர் எஸ்.பி.வேலுமணி தரப்பிற்கு ஆதரவாகச் செயல்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. கட்சியின் ஊதுகுழலாகச் செயல்படும் நாளேட்டின் ஆசிரியர், உட்கட்சி மோதலுக்கு மத்தியில் விலகியிருப்பது இபிஎஸ் தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அதிமுக-வின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரும், 25-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் கட்சித் தலைமைக்கு எதிராகத் திரும்பியுள்ள சூழலில், கல்யாண சுந்தரத்தின் இந்த விலகல் அக்கட்சியின் தகவல் தொடர்பு மற்றும் கொள்கைப் பரப்புப் பணிகளில் தொய்வை ஏற்படுத்தக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.