சமையல் ஒலிம்பிக் போட்டி.. 124 வருடங்களுக்கு பிறகு இந்தியாவிற்கு தங்க பதக்கம்.. அசத்திய சென்னை மாணவர்கள்..!
உலகின் மிகப்பெரிய சர்வதேச சமையல் ஒலிம்பிக் போட்டி (IKA) ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும். இது ஜெர்மனியின் ஸ்டட்கார்ட்டில் பிப்ரவரி 2 முதல் 7 வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தென்னிந்திய செஃப் அசோசியேஷன் சார்பில் ஜூனியர் பிரிவில் சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டை சேர்ந்த மாணவர்கள் போட்டியிட்டனர்.
சமையலர் ஸ்ரேயா அனிஷ் - 1 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களையும், சமையலர் சரவண ஜெகன், செஃப் ஜோகப்பா புனித் ஆகியோர் தலா 1 தங்கம், 1 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.செஃப் அங்கித் கே ஷெட்டி - 2 வெள்ளிப் பதக்கங்களையும், செஃப் முலாம்குழியில் ஆல்பர்ட் ஆகாஷ் ஜார்ஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். சென்னையின் அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டைச் சேர்ந்த மாணவர்கள் உலகெங்கிலும் உள்ள சிறந்த சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு இந்தப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கத்தின் (SICA) தலைவர் செஃப் தாமு, பொதுச் செயலாளர் சீதாராம் பிரசாத் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தாமு, 124 ஆண்டுகளுக்குப் பிறகு தென்னிந்திய செஃப் அசோசியேஷன் அணி 10 பதக்கங்கள் வெல்வதும், இந்தியா தங்கப் பதக்கம் வெல்வதும் வரலாற்றில் இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.
குறிப்பாக, 22 நாடுகளைச் சேர்ந்த 2000 சமையல் கலைஞர்களுடன் போட்டியிட்டு பதக்கங்களை வென்றதாகவும், இந்த வெற்றிக்கு SICA பயிற்சியாளர்களின் பங்களிப்பு பெரிதும் உதவியதாகவும் சமையல் கலைஞர் தாமு தெரிவித்தார். இதுகுறித்து சென்னை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட்டின் தலைவர் பூமிநாதன் கூறியதாவது:
இந்த வெற்றி, இந்தியா தங்கப் பதக்கங்களை வெல்ல முதல் படியாக அமையும் என்றார். 3 தங்கப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு தென்னிந்திய செஃப் அசோசியேஷன் மூலம் மாபெரும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் சமையல் என்றாலே தென்னிந்தியா என்ற நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.