"இதைப் பார்க்காதீங்க... ஆபாசத்தின் உச்சம்... வரம்புகளை மீறிட்டோம்' - சஞ்சய் தத், நோரா ஃபதேஹி பாடலுக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு | ரசிகர்கள் கொந்தளிப்பு!

 
கேடி: தி டெவில் கேடி: தி டெவில்

கன்னடத் திரையுலகின் பிரம்மாண்ட தயாரிப்பான 'கேடி: தி டெவில்' படத்தில் இடம்பெற்றுள்ள ஐட்டம் பாடலான "சர்கே சுனார் தேரி சர்கே" சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. பாடலின் வரிகள் மற்றும் நடன அமைப்பு குறித்து எழுந்துள்ள சர்ச்சைகளை இணையத்தை சூடாக்கியுள்ளன. 

கன்னட நடிகர் துருவா சர்ஜா நடிப்பில், இயக்குநர் பிரேம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'கேடி: தி டெவில்'. இந்தப் படத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் சஞ்சய் தத் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் ஒரு சிறப்பு நடனப் பாடலில் இணைந்துள்ளனர். நேற்று வெளியான இந்தப் பாடலின் 'லிரிக்கல் வீடியோ', ரசிகர்களிடையே வரவேற்புக்குப் பதிலாகக் கடும் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது.


பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் மிகக் கீழ்த்தரமாக இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. "இது 2026ம் ஆண்டு, இன்னும் இப்படியா?" என்று இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு நடனப் பாருக்குள் நடப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ள இந்தப் பாடலில், நோரா ஃபதேஹியின் நடன அசைவுகளும், வரிகளும் குடும்பத்துடன் பார்க்க முடியாத வகையில் ஆபாசமாக இருப்பதாகக் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக, "ஆபாசம் அதன் உச்சத்தைத் தொட்டுவிட்டதாக யூடியூப் கமெண்ட் பகுதியில் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

திரைப்படப் பாடல்கள் வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, தரம் தாழ்ந்த வரிகளைப் பயன்படுத்துவதை முன்னணிப் பாடகர் அர்மான் மாலிக் கடுமையாக விமரிசித்துள்ளார். இந்தப் பாடல் குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்துகள் வைரலாகி வருகின்றன.


"இந்த வீடியோ எனது டைம்லைனில் வந்தபோது, நான் கேட்டது சரிதானா என்பதை உறுதிப்படுத்த மீண்டும் ஒருமுறை கேட்க வேண்டியிருந்தது. வணிக ரீதியான பாடல் எழுதுதல் இவ்வளவு பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதைக் கண்டு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உண்மையிலேயே எனக்கு வார்த்தைகள் வரவில்லை. இதைக் கேட்காமல் இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்" என அர்மான் மாலிக் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார். ஒரு முன்னணிப் பாடகரே சக கலைஞர்களின் படைப்பை இவ்வளவு பகிரங்கமாக விமரிசித்தது, இப்பாடல் வரிகள் எவ்வளவு மோசமாக உள்ளன என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

ரக்கீப் ஆலம் எழுதியுள்ள இந்த வரிகளுக்கு அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ளார். மங்லி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். ஒரு தரம் குறைந்த வணிகத் தேடலுக்காகக் கலை நயத்தைத் தயாரிப்புத் தரப்பு பலி கொடுத்துவிட்டதாக இசையுலகினர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட்டின் 'துரந்தர்' என அழைக்கப்படும் சஞ்சய் தத், சமீபகாலமாகத் தென்னிந்தியப் படங்களில் (கேஜிஎஃப், லியோ) மிரட்டலான வில்லன் பாத்திரங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ஆனால், இந்தப் பாடலில் அவர் இடம்பெற்றுள்ள விதம் அவரது ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது. "துரந்தர் போன்ற படங்களில் கெத்தாக நடித்த சஞ்சய் தத்திடம் இருந்து இவ்வளவு மலிவான ஒரு பாடலை எதிர்பார்க்கவில்லை" என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.


சஞ்சய் தத் மட்டுமின்றி, ஷில்பா ஷெட்டி போன்ற முன்னணி நட்சத்திரங்களும் இந்தப் படத்தில் உள்ளனர். இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் இருந்தும், ஒரு பாடலுக்காக இவ்வளவு கீழ்த்தரமான விளம்பர யுக்தியை இயக்குநர் பிரேம் கையாண்டிருக்க வேண்டாம் என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தப் படம், பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ளது. துருவா சர்ஜாவுடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த் எனப் பெரிய பட்டாளமே நடிக்கிறது. இந்தப் சர்ச்சைகளுக்கு மத்தியில், 'கேடி: தி டெவில்' திரைப்படம் வரும் ஏப்ரல் 30ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.