நேற்று கைது.. இன்று விடுதலை.. 22 மீனவர்களையும் உடனே ரிலீஸ் செய்தது இலங்கை கடற்படை..!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று கைது செய்யப்பட்ட பாம்பன் பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை விடுதலை செய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை ராஜ், கேசியர் ஆகியோரின் 2 படகுகள், கோடியக்கரையில் இருந்து கடந்த 15-ந் தேதி மீன்பிடிப்புக்காக சென்றன. இந்த 2 படகுகளில் மொத்தம் 22 மீனவர்கள் சென்றனர். கடலில் தங்கி மீன்பிடிக்க மீனவர்கள் சென்றிருந்தனர். இந்த 22 மீனவர்களும் பாம்பன், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த நிலையில் கோடியக்கரை- இலங்கையின் பருத்திதுறை இடையே மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படை 22 மீனவர்களையும் சுற்றி வளைத்தது. தங்களது நாட்டு எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக கூறி 22 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்து இலங்கைக்கு அழைத்துச் சென்றது. இந்த தகவல் தமிழக மீனவர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.
பொதுவாக தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டால் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நீதிமன்ற விசாரணைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவர். ஆனால் இம்முறை 22 மீனவர்களும் உடனடியாக விடுதலை செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.