இலங்கை கடற்படை மீண்டும் அத்துமீறல்.. தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்த அட்டூழியம்..!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 25பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில், நாகை, காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சென்ற இரண்டு படகையும் அதிலிருந்த 25 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 25 மீனவர்களை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென கைதான மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசும், மத்திய அரசும் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.