இறப்பு சான்றிதழ் வாங்க சென்ற நபர் உயிரிழப்பு.. ஆட்டோ ஸ்டேண்டில் பெரும் பரபரப்பு..!!

ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த நபர் திடீரென மயங்கி விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பொய்யாமலை ரோடு, உதயம் தியேட்டர் அருகில் உள்ள ராமகிருஷ்ணன் என்பவரது மகன் மணவாளன் (வயது 60). இவரது தங்கை திருச்சி செந்தண்ணிர்புரம் பகுதியில் வசித்து வருகிறார். அவரது கணவர் இறப்பு சான்றிதழ் வாங்குவதற்காக மணப்பாறையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார்.
அப்போது திருச்சி அரியமங்கலம் பகுதியில் ரயில்நகர் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த மணவாளன் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அப்பகுதியில் இருந்த நபர்கள் மணவாளனின் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்து அவரை மீண்டும் எழுப்ப முயற்சி செய்தனர். ஆனால் அவர் மீண்டும் எழவில்லை.
இதனைத் தொடர்ந்து அரியமங்கலம் காவல் துறையினருக்கும், 108 ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மருத்துவ பணியாளர்களும், காவல் துறையினரும் மணவாளனை பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் மணவாளனின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மாரடைப்பின் காரணமாக அவர் இறந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.