திருவண்ணாமலை நிலச்சரிவில் அனைவரும் மீட்கப்பட்டதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்... டிடிவி தினகரன் அறிக்கை!
தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மலை அடிவாரத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 7 பேர் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களை மீட்கவும் இந்தப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் தீயணைப்பு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்து வரும் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தினால் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் மண்சரிவு ஏற்பட்டு மலை உச்சியில் இருந்த பாறைகள் உருண்டு அடிவாரப் பகுதிகளில் இருக்கும் குடியிருப்புகளில் விழுந்ததில் 7 பேர் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மண்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளில் 5 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, சிக்கியிருக்கும் அனைவரையும் பாதுகாப்பான முறையில் மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.
புயல் கரையை கடந்த நிலையிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் குறுகிய கால இடைவெளியில் கொட்டித் தீர்த்த கனமழையால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதோடு குடியிருப்புகளையும் மழைநீர் சூழ்ந்திருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முழுமையாக முடங்கியுள்ளது.

எனவே, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மண்சரிவில் சிக்கியிருக்கும் 7 பேரையும் பாதுகாப்பாக மீட்பதோடு, கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஏதுவாக உரிய நிவாரணத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
