கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியது... தேவாலயங்களில் சாம்பல் புதன் வழிபாடு!

 
தேவாலயம் சாம்பல் புதன் ஈஸ்டர்

கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலி வழிபாடு நடைபெற்றது. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலியைப் பங்குத்தந்தை செல்வன் பெர்னாண்டோ நிறைவேற்றினார். மனித வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் விதமாக, வழிபாட்டில் பங்கேற்ற கிறிஸ்தவர்களின் நெற்றியில் மந்திரித்த சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.

ஆஷ் வெட்னஸ்டே சாம்பல் புதன் கிறிஸ்து

இதே போல் தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம், யூதா ததேயு ஆலயம், மிக்கேல் அதிதூதர் தேவாலயம் மற்றும் சி.எஸ்.ஐ தேவாலயங்கள் உள்ளிட்ட அனைத்துத் திருத்தலங்களிலும் சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலிகளும் பிரார்த்தனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான கிறிஸ்தவப் பெருமக்கள் மற்றும் மாணவ-மாணவியர் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சாம்பல் புதன்

தவக்காலத்தின் தொடர்ச்சியாக வரும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை வழிபாடுகளும், சிறப்புத் தியானங்கள் மற்றும் தவக்காலத் திருப்பயணங்களும் நடைபெறவுள்ளன. வரும் மார்ச் 29-ஆம் தேதி குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2-ஆம் தேதி புனித வியாழனை முன்னிட்டு பாதம் கழுவும் சடங்கும், ஏப்ரல் 3-ஆம் தேதி இயேசு சிலுவையில் அறையப்பட்டதை தியானிக்கும் புனித வெள்ளி சிலுவைப்பாதை வழிபாடுகளும் நடைபெறும். தவக்காலத்தின் முக்கிய நிகழ்வாக, இயேசு உயிர்த்தெழுந்ததைக் கொண்டாடும் ஈஸ்டர் பண்டிகை வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.