யார் அந்த ஃஜெனிபர்? - அரிவாளுடன் அண்ணாமலையார் கோயிலில் புகுந்த இளைஞரிடம் விசாரணை தீவிரம்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணாமலையார் கோயிலுக்குள் கொடுவாகத்தியுடன் புகுந்து இளைஞரை பார்த்து பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
கோயிலில் உள்ள ஆணையர் அலுவலகத்திற்குள் அனுமதி இன்றி உள்ளே நுழைந்து அங்கிருந்த கண்ணாடிகளை உடைத்தார். இதனைக்கண்ட அங்கிருந்த பக்தர்கள் அச்சத்தில் சிதறி ஓடினர். சிலர் அந்த இளைஞரை பிடித்து தாக்கினர். பக்தர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முயன்று கிழே விழுந்ததில் அவரது காலில் முறிய்வு ஏற்பட்டது. தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில் அவர் கர்நாடகத்தை சேர்ந்தவர் என்பவது தெரியவந்தது. அவருடன் வந்த காதலி ஜெனிபர் என்பவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். தங்களை சிலர் துரத்தியதாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க தனது காதலன் ப்ரீத்தம் கோயிலுக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார்.
எனினும் பெங்களூருவில் இருந்து இவர்கள் எதற்கு திருவண்ணாமலைக்கு வந்தார்கள்? இவர்களை விரட்டியது யார் ஆகியவை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த பெண் மற்றும் இளைஞரிடமும் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.