கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது - வெளியான தகவல்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் (40 கிராம்) வரை நகைக்கடன் பெற்றவர்களுக்கு, கடன் தள்ளுபடி செய்வதற்கான புதிய தகுதி விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளைத் தமிழக அரசு விரைவில் அறிவிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு (செப்டம்பர் 15) இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய அனுபவங்கள் மற்றும் நிபந்தனைகளின் அடிப்படையில், முறைகேடுகளைத் தவிர்க்கவும் தகுதியான ஏழை எளிய மக்களுக்கு மட்டுமே இச்சலுகை சென்றடைவதை உறுதி செய்யவும் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. அதன்படி பின்வருவோருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காது எனத் தெரிகிறது:
அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்க ஊழியர்களுக்கு இந்தத் தள்ளுபடி சலுகை பொருந்தாது. போலி ஆவணங்கள், தவறான ரேஷன் கார்டு அல்லது ஆதார் விவரங்களைக் கொடுத்துக் கடன் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாது. கூட்டுறவு வங்கிகளில் ஏற்கனவே பயிர்க்கடன் தள்ளுபடி சலுகையைப் பெற்ற குடும்பத்தினருக்கு இந்த நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது. நகைக்கடன் தள்ளுபடிச் சலுகையானது ஒரு ரேஷன் கார்டிற்கு 5 சவரன் (40 கிராம்) வரை மட்டுமே கணக்கிடப்படும்.

கடந்த காலங்களில் பல்வேறு இடங்களில் ஒரே குடும்ப உறுப்பினர்கள் வெவ்வேறு பெயர்களில் கடன் பெற்று முறைகேடு செய்ததைக் கண்டறியும் வகையில், தற்போது ஆதார் மற்றும் ரேஷன் கார்டு கணினிமயமாக்கல் மூலம் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டு வருகிறது. தகுதியான நபர்களின் இறுதிப் பட்டியல் விரைவில் கூட்டுறவு வங்கிகள் மூலம் வெளியிடப்படும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
