”என் நகையை திருடிட்டாங்க”.. காண்போரை கலங்க வைத்த பெண்ணின் கதறல்.!!

 
நகை திருட்டால் அழுத பெண்

   திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏற முயன்ற   பெண் பக்தரிடம் 3.1/2 பவுன் தங்க சங்கிலி பறிப்பு. தாலுகா காவல்நிலையம் வாசல் முன்பு அமர்ந்து பெண் கதறி அழுத சம்பவம் காண்போரை கண் கலங்க செய்தது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர்  அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் சொந்த ஊர் திரும்பி சென்று வருகின்றனர். போதிய பேருந்துகள் இல்லாததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இயக்கப்பட்ட பேருந்துகளில் படியில் தொங்கியவாறு பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளத்தை சேர்ந்த கலா(38). என்பவர்  திருநெல்வேலி செல்ல கூடிய தனியார் பேருந்தில் ஏற முயன்ற போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி கழுத்தில் அணிந்திருந்த 3½ சவரன் தங்கச் சங்கிலியை பெண் ஒருவர் பறித்து சென்ற தாக கூறப்படுகிறது. பேருந்துக்குள் சென்ற கலா கழுத்தை பார்த்தபோது அணிந்திருந்த செயினை காணவில்லை உடனே கலா பேருந்தை விட்டு கீழே  இறங்கி கதறி அழுதார். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கிச் சென்றார். இதனால் கலா அழுது கொண்டே பேருந்து பின்னாலே ஓடி சென்றார். இதனை எடுத்து உடனடியாக திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு காவல் நிலைய வாசலில் அமர்ந்து கதறி அழுத காட்சி காண்போரை கண் கலங்கச் செய்தது. மேலும் திருச்செந்தூரில் உள்ள நகைக்கடையில் வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் செல்போனை பேருந்தில் ஏற முயன்ற போது பறித்துச் சென்றுள்ளனர். இதுபோல்  பேருந்தில் ஏறிய சுமார் 10 பேர் செல்போன் பறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல மணி நேரமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்த நிலையில் ஒரு போலீசார் கூட பாதுகாப்பு பணியில் இல்லாததால் செயின் பறிப்பு, செல்போன்கள் பறிப்பு, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web