அரசுப் பேருந்தில் வாலிபருக்குச் சராமாரி கத்திக்குத்து ... திருவண்ணாமலையில் பரபரப்பு!

 
அரிவாள்வெட்டு

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து நேற்று திருப்பூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. தென்பெண்ணை ஆற்றங்கரை கொலமஞ்சனூர் வலது கரை ஓரத்தில் உள்ள புற்று கோயிலுக்குச் செல்வதற்காக ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரமாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். அப்போது பேருந்தின் பின்பகுதியில் இருந்து திடீரெனப் பயங்கர அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் அனைவரும் என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்த்தனர்.

அரிவாள்வெட்டு

அப்போது 2 பேர் முன் சீட்டில் அமர்ந்திருந்த வாலிபரைத் தங்களிடம் இருந்த கத்தியால் சரமாரியாக வெட்டிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்களில் வந்த மேலும் 2 பேர் பேருந்திற்குள் புகுந்து அந்த வாலிபரை கொடூரமாக வெட்டினர். பேருந்திற்குள் நடைபெற்ற இந்தத் தாக்குதலைக் கண்ட பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறியடித்தபடி வெளியே ஓடினர். வாலிபரை வெட்டிய 4 பேரும் உடனடியாக அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.

அரிவாள் வீச்சு

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தண்டராம்பட்டு காவல் துறையினர், படுகாயமடைந்த வாலிபரை மீட்டுத் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில், காயமடைந்தவர் திருவண்ணாமலை அருகே உள்ள ஆனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சிவசங்கர் (32) என்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், தப்பி ஓடிய 4 பேரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.