காலம் பேசாது... ஆனா காத்திருந்து பதில் சொல்லும் - ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு ரஜினிகாந்த் பதில்!

 
ரஜினி ரஜினி

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது அரசியல் பயணம் குறித்துத் தெரிவித்த கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் திரையுலகினருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் மிரட்டலுக்கு பயந்து தனது அரசியல் பயணத்தை கைவிட்டதாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா பேசியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினி கூறியிருப்பதாவது: த.வெ.க. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா அவர்கள் சமீபத்தில் என்னைப் பற்றி உண்மைக்கு மாறான ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இபிஎஸ் ரஜினி

அவருடைய அவதூறுக் கருத்தைக் கண்டித்து, எனக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த தமிழக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர் ரகுபதி, தொல்.திருமாவளவன், எஸ்.பி.வேலுமணி, நண்பர் அண்ணாமலை, அர்ஜுனமூர்த்தி, அன்புமணி ராமதாஸ், ஜி.கே. வாசன், ஜான் பாண்டியன், புகழேந்தி மற்றும் பல கட்சி அரசியல் தலைவர்கள், அமீர், ஜி.தனஞ்சயன் மற்றும் திரையுலக நண்பர்கள், மற்றும் நக்கீரன் கோபால், சாணக்கியா ரங்கராஜ் பாண்டே மற்றும் ஊடகத்துறையினர், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். "காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" வாழ்க தமிழ்நாடு! வளர்க தமிழக மக்கள்!! ஜெய்ஹிந்த்!!! என்று கூறியுள்ளார்.