செப்.1 முதல் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயிலுக்குள் செல்போனுக்குத் தடை - மீறினால் பறிமுதல்!
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் அண்ணாமலையார் திருக்கோயிலுக்குள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல முழுமையாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கோயில்களில் செல்போன் தடை நடைமுறையில் இருந்தாலும், பக்தர்கள் சிலர் கோயிலுக்குள் புகைப்படம், வீடியோ, செல்ஃபி மற்றும் சமூக வலைதளங்களுக்கான குறும்படங்களை எடுத்து வருகின்றனர். இத்தகைய செயல்களால் கோயிலின் புனிதத் தன்மையும் அமைதியான ஆன்மீகச் சூழலும் பாதிக்கப்படுவதோடு, சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குப் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன.

பக்தர்கள் கொண்டு வரும் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகக் கோயில் வளாகத்தைச் சுற்றி 5 இடங்களில் சிறப்புப் பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.5 கட்டணம் செலுத்திச் செல்போன்களைப் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்துவிட்டு டோக்கன் பெற்றுக்கொள்ளலாம். தரிசனம் முடிந்த பிறகு டோக்கனைக் காண்பித்துத் தங்கள் செல்போன்களைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
தடையை மீறி யாரேனும் கோயிலுக்குள் செல்போன்களை மறைத்து எடுத்துச் சென்றால், அந்தச் செல்போன்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருக்கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
