டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வர்களுக்கு 3-ம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிப்பு: மே 8-ல் சான்றிதழ் சரிபார்ப்பு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் குரூப்-4 பணியிடங்களுக்கான மூன்றாம் கட்டக் கலந்தாய்வு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் நீண்ட நாட்களாகக் காத்திருந்த தேர்வர்களின் அரசுப் பணி கனவு நனவாகவுள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதன் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகள் முடிந்து பணி நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பத் தற்போது மூன்றாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.

டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி சென்னை பிராட்வேயில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணிகளுக்கானமே 8ம் தேதி கலந்தாய்வு தொடங்கும்.
அழைப்பாணை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மூன்றாம் கட்டக் கலந்தாய்விற்குத் தகுதி பெற்றுள்ள தேர்வர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் இணையதளத்திற்குச் சென்று தங்களது பதிவு எண்ணைப் பதிவிட்டு, கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் இடம் அடங்கிய அழைப்பாணையினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வர்களுக்குத் தனியாகத் தபால் மூலம் அழைப்பாணை அனுப்பப்படமாட்டாது என்பதால், இணையதளம் வழியாகவே இதனைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். "குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது" எனத் தேர்வாணையம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
எனவே தேர்வர்கள் தேவையான அனைத்து அசல் சான்றிதழ்களையும் முன்கூட்டியே தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அரசுப் பணியில் சேரப்போகும் புதிய வெற்றியாளர்களுக்கு வாழ்த்துகள்!
