இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... ஆடிக் கிருத்திகைக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் உத்தரவு!
முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 5ம் படை வீடாக விளங்கும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையும், தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. நாளை ஆடிக் கிருத்திகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமன்றி வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இன்று ஆகஸ்ட் 6ம் தேதி, ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களைச் செலுத்திச் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும், உள்ளூர் பக்தர்களும் திருவிழாவில் கலந்துக் கொள்ள வசதியாகவும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ச. கவிதா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
இந்த உள்ளூர் விடுமுறையானது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்று அவசரத் தேவைகளுக்கான அரசு கருவூலம் மற்றும் துணைக் கருவூல அலுவலகங்களுக்குப் பொருந்தாது என்றும், அவை வழக்கம் போல இன்று குறைந்த பணியாளர்களுடன் செயல்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் பொருட்டு, ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று மாவட்டத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் வழக்கமான பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த முன்னேற்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
