இன்று யுகாதி திருநாள்.. வசந்தகால தொடக்கமும், சரித்திர நம்பிக்கையும்!
இன்று மார்ச் 19ம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு யுகாதி பண்டிகை. ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களால் யுகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதே நாள் மகாராஷ்டிராவில் ’குடி பட்வா’ என்ற பெயரில் கொண்டாப்பட்டு வருகிறது. அத்துடன் சைத்ரா நவராத்திரியின் தொடக்க நாளாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஒடிசாவில் ‘பனா சங்க்ராந்தி’ மேற்கு வங்கத்தில், ‘பொய்லா பாய்சாக்’ அசாமில், ‘போஹாக் பிஹூ’ என விதவிதமான பெயர்களில் கொண்டாடப்படுகின்றன.

பெயர்களில் வேறுபாடு இருந்தாலும் இந்தப் பண்டிகையின் மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் ஒற்றுமை ஆகியவை ஒன்றுதான். யுகாதி தினத்தில் வேப்பிலை, உப்பு, மாங்காய், புளி, இனிப்பு சேர்த்து பிரசாதம் செய்யப்படுகிறது.
பண்டிகை தினத்தன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து இந்த பூஜையை செய்யலாம். வேப்ப இலையால் செய்யப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பிறகே இனிப்பு பலகாரங்களை சாப்பிட வேண்டும். அத்துடன் பச்சடி என்ற சிறப்பு உணவு ஒவ்வொரு வீட்டிலும் தயாரிக்கப்பட்டு அனைவராலும் ருசிக்கப்படுகிறது.

இனிப்பு, காரம், கசப்பு மற்றும் புளிப்பு ஆகிய அனைத்து சுவைகளையும் உள்ளடக்கியதே யுகாதி. புத்தாண்டில் அனைத்து விஷயங்களையும் சமமாக அனுபவிக்கும் நிலையை உருவாக்க வேண்டும். மனம் அதை ஏற்றுக்கொண்டு முழுமையாக வாழ வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதே இப்பண்டிகையின் நோக்கம்.
புத்தாண்டில் சிலர் வீட்டிற்கு வெள்ளை வர்ணம் பூசி வாயிலில் ரங்கோலி வரைவர். யுகாதியில் தொடங்கப்படும் புது காரியங்கள் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுகாதி என்றால் ஒரு புதிய யுகத்தின் ஆரம்பம் என்பது பொருளாகும். இந்த நாளில்தான் பிரம்மா பூமியின் பகுதிகளை உருவாக்கத் தொடங்கினார் என்பது சரித்திர நம்பிக்கை.
உகாதி திருநாளை முன்னிட்டு தெலுங்கு, கன்னடம் மொழி பேசும் மக்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
