காலையிலேயே சோகம்.. அரசுப் பேருந்து மீது கார் மோதி விபத்து; 2 பேர் பலி... குழந்தை உட்பட 5 பேர் படுகாயம்!
கடலூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அரசுப் பேருந்து மீது மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வேளாங்கண்ணி மாதா கோயில் கொடியேற்ற விழாவில் பங்கேற்றுவிட்டுச் சென்னையில் இருந்து மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது, கடலூர் சின்ன காரைக்காடு பகுதியில் கார் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது எதிர்பாராதவிதமாகப் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுத் தகுந்த சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
