நீலகிரியில் துயரம்... சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் படுகாயம்!

 
விபத்து விபத்து

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அக்கயபலிம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேர், கர்நாடக மாநிலம் மைசூரு மற்றும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு வேன் ஒன்றில் மகிழ்ச்சியாகச் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளனர். தங்களது மைசூரு சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு, அவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கண்டு ரசித்து வந்தனர்.

விபத்து

இப்படியிருக்கையில், அவர்களின் வேன் குன்னூர் அருகே உள்ள நந்தகோபால் பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்தது. வேகம் குறையாமல் தறிகெட்டு ஓடிய அந்த வேன், கணப்பொழுதில் சாலையிலேயே தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தின் காரணமாக வேனில் பயணம் செய்தவர்களில் 14 பேர் பலத்த காயமடைந்து வலியால் அலறினர்.

ஆம்புலன்ஸ்

விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர், வேனுக்குள் சிக்கிப் படுகாயமடைந்திருந்த 14 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்துப் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.