ஓடும் ரயிலில் இருந்து விழுந்த குழந்தை, அதன் மீது விழுந்த தந்தை... 8 பெட்டிகள் கடந்து சென்ற விபரீதம்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!

 
train train

பங்களாதேஷின் பைரப் ரயில் நிலையத்தில் ஒரு வயது குழந்தையுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற தந்தை நிலைதடுமாறி ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்தார். தனது கண் முன்னே குழந்தை விழுவதைக் கண்ட அந்த தந்தை ஒரு நொடியும் தாமதிக்காமல் உடனே கீழே குதித்து குழந்தையை இறுகப் பிடித்துக் கொண்டார். அவர்களை மீட்கும் முன்பே ரயிலின் 8 பெட்டிகள் அவர்கள் மீது கடந்து சென்றதால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் அவர்கள் உயிரிழந்துவிட்டதாகக் கருதி பதற்றத்தில் அலறினர்.

ரயில் முழுமையாக நின்ற பிறகு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது தந்தையும் குழந்தையும் சிறு காயம் கூட இன்றி உயிருடன் இருந்ததைக் கண்டு அனைவரும் மெய்சிலிர்த்துப் போயினர். சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்த திதாஸ் கம்யூட்டர் ரயில் நகரத் தொடங்கியபோது அவசரமாக இறங்க முயன்றதே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இந்த அதிர்ஷ்டவசமான மீட்புச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பைரப் ரயில் விபத்து என்ற பெயரில் காட்டுத்தீயாய் பரவி வருவதுடன் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ரயில்வே போலீசார் இது முழுக்க முழுக்க இறைவனின் கருணையால் நடந்த அற்புதம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் ஓடும் ரயிலில் ஏறுவதோ அல்லது இறங்குவதோ உயிருக்கு பேராபத்தை விளைவிக்கும் என்பதால் பயணிகள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு சிறிய தவறான முடிவு மிகப்பெரிய உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்த்தும் இந்தச் சம்பவம் ரயில் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறது.