ரயிலில் பெட்டிக்குள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட தலையில்லாத இளம்பெண் உடல்!
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் ரயில் நிலையத்திற்கு நேற்று (மே 17) காலை 6:35 மணி அளவில் சப்ரா–கோமதி நகர் விரைவு ரயில் வந்து சேர்ந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர், அந்த ரயிலின் படுக்கை வசதி கொண்ட பெட்டியைத் தூய்மைப் பணியாளர்கள் வழக்கம்போல் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பெட்டியின் கழிவறை அருகே எஜமானர் இல்லாத ஒரு பெரிய இரும்புப் பெட்டியும் மற்றும் ஒரு கனமான பயணப் பையும் நீண்ட நேரமாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் சந்தேகமடைந்தனர்.
#WATCH | Lucknow, UP | Lucknow Railways SP Rohit Mishra says, "During a routine check on a train which runs from Chhapra via Gorakhpur to Gomti Nagar, railway staff discovered a box and a bag in the sleeper coach. Upon notification, the station master was informed, who further… pic.twitter.com/w9jOhEywf7
— ANI (@ANI) May 18, 2026
இது குறித்துத் தூய்மைப் பணியாளர்கள் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் ரயில்வே போலீசாருக்கு அவசரத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்தப் பெட்டியையும் பையையும் நடைமேடைக்குக் கொண்டு வந்து சோதனையிட்டனர். இரும்புப் பெட்டி பூட்டப்பட்டிருந்ததால் சுத்தியலால் உடைத்துத் திறந்து பார்த்தபோது, அதற்குள் இரத்தக் கறைகளுடன் கூடிய சுடிதார் அணிந்த இளம்பெண் ஒருவரின் உடல் பகுதி மட்டும் தனியாகக் கிடப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பின்னர் அருகில் இருந்த பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் நெகிழிப் பவரைகளில் சுற்றப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் கை மற்றும் கால்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் அந்தப் பெண்ணின் தலை மட்டும் அந்தப் பைகளிலோ அல்லது ரயில் பெட்டியிலோ எங்குமே கிடைக்கவில்லை எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். கொலை செய்யப்பட்ட பெண்ணிற்குச் சுமார் 30 வயது இருக்கலாம் என்றும், ரயிலில் உடல் மீட்கப்படுவதற்குச் சுமார் 10 முதல் 12 மணி நேரத்திற்கு முன்பே அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் லக்னோ ரயில்வே போலீஸ் கண்காணிப்பாளர் ரோஹித் மிஸ்ரா கூறியுள்ளார். இந்தக் கொடூரக் கொலையைச் செய்த மர்ம நபர்களைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ரயில் பயணித்த வழித்தடங்களில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளும் தற்பொழுது தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
