நடுரோட்டில் குழிக்குள் விழுந்த லாரி... சாலையின் பள்ளத்தை நிரப்ப வந்தது போது விபரீதம் - வைரலாகும் வீடியோ!

 
பள்ளத்தில் லாரி சாலை குழி குழிக்குள்

நாசிக்கில் சாலைக் குழிகளைச் சீரமைப்பதற்காகச் சரளைக் கற்களை ஏற்றி வந்த டம்ப்பர் லாரியே திடீரெனச் சாலை இடிந்து 12 அடி ஆழப் பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள கங்காபூர் சாலையையொட்டிய நவஷா கணபதி பகுதி அருகே, சாலை சீரமைப்புப் பணிக்காகச் சரளைக் கற்களை ஏற்றி வந்த டம்ப்பர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியின் எடையைத் தாங்க முடியாமல் சாலையின் ஒரு பகுதி திடீரென உள்நோக்கி இடிந்து விழுந்ததில், டம்ப்பர் லாரி சுமார் 10 முதல் 12 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்தது.


நாசிக் மாவட்டப் பொறுப்பு அமைச்சர் கிரிஷ் மகாஜன், நகரின் 80 சதவீதச் சாலைக் குழிகள் உயர்தரத்துடன் சீரமைக்கப்பட்டு விட்டதாகக் கூறியிருந்தார். ஆனால், சீரமைப்புக்கு வந்த லாரியே புதையும் அளவுக்குச் சாலை இடிந்து விழுந்தது அவரது கூற்றைப் பொய்யாக்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே நாசிக்கில் மோசமான சாலைக் குழிகளால் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத் இதற்கு எதிராகப் பேரணி நடத்தியிருந்தார். மேலோட்டமாகக் குழிகளை நிரப்புவது மட்டுமே தீர்வாகாது என்றும், புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளிலேயே விரிசல்கள் ஏற்படுவதால் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமானத் தரத்தையும் ஆய்வு செய்து அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.