பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி... நிலைதடுமாறி விழுந்து காயமடைந்த வாலிபர்!

 
செயின் பறிப்பு திருட்டு கொள்ளை

திருநெல்வேலி  மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஜார் பகுதியில் பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த வாலிபர், நிலைதடுமாறி விழுந்ததில் காயமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

தச்சநல்லூர் மேலக்கரை நியூ காலனியைச் சேர்ந்த சாந்தி (55) என்பவர், பஜார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு வாலிபர்கள், திடீரென சாந்தியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்தாலும், சாந்தி சாமர்த்தியமாகச் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதைக் கண்ட வாலிபர்கள், அங்கிருந்து தப்பிக்க முயன்றனர். அங்கிருந்து வேகமாகத் தப்பிக்க முயன்றபோது, இவர்களது இருசக்கர வாகனம் எதிரே வந்த மற்றொரு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வாலிபர்கள் இருவரும் கீழே விழுந்தனர்.

செயின் பறிப்பு

விபத்தில் திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைபட்டியைச் சேர்ந்த ரமேஷ் (24) என்பவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் வந்த மற்றொருவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். காயமடைந்த ரமேஷை மீட்ட போலீசார், அவரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சாந்தி அளித்த புகாரின் பேரில், தச்சநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரமேஷிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதோடு, தப்பியோடிய அவரது கூட்டாளியையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்களின் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் தச்சநல்லூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.