“முதலமைச்சர் பதவி வேண்டும்”... தவெக-விற்கு இபிஎஸ் அதிரடி நிபந்தனை!

 
tvk tvk

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப் பெரும்பான்மை அளிக்காத நிலையில், ஒரு தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையில், ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அதிமுகவுடன் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்தச் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, தவெக-விற்குப் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆதரவு அளிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனையில், முதல் இரண்டு ஆண்டுகளுக்குத் தங்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்றும், அத்துடன் சபாநாயகர் பதவியையும் தங்களது கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். இந்த நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே கூட்டணி குறித்துப் பரிசீலிக்கப்படும் என அதிமுக தரப்பு பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தவெக தலைமைக்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

அதிமுகவின் இந்தத் திடீர் நிபந்தனையால் தவெக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்டுள்ள இந்தச் சிக்கல் குறித்துத் தலைவர் விஜய் தலைமையில் அவசர ஆலோசனை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. ஒருபுறம் ஆட்சி அமைக்கும் முனைப்பு இருந்தாலும், முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பது குறித்த தயக்கம் தவெக-விடம் நிலவுகிறது. தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதைத் தீர்மானிப்பதில் இந்த இழுபறி நீடித்து வருவது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.