ஆசை ஆசையாய் வாங்கிய பைக்.. தொடர்ந்து பழுதானதால் வாங்கிய கடையிலேயே ரிட்டன் கொடுத்த வாடிக்கையாளர்..!!

 
இப்ரான்

வாகனம் வாங்கி இரண்டரை மாதங்களில் தொடர்ந்து பழுது ஏற்பட்டதால் வாங்கிய கடையிலேயே ஒப்படைத்த சம்வம் அரங்கேறி உள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம்  கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சாகீர். இவரது மகன் இப்ரான் (வயது 27). சாகீர் துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த செப்டமர் மாதம் கோவை அவிநாசி சாலை வ.உ.சி பூங்கா அருகே உள்ள சுகுணா ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தில் தனது மகன் இப்ரானுக்கு ரூ.1.98 லட்சம் மதிப்புள்ள Hero X Pluse வாங்கி கொடுத்துள்ளார். வாகனம் வாங்கி இரண்டரை மாதங்கள் ஆகிய நிலையில் பைக் இன்ஜினில் ஆயில் கசிவு ஏற்பட்டு உள்ளது.

பைக் எடுத்து தற்போது வரை வெறும் 1100 கிலோ மீட்டர் மட்டுமே ஓட்டப்பட்டுள்ளது. இதனை பலமுறை நிறுவனத்திடம் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாடிக்கையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பைக் எடுத்து ஆறு முறை ஆயில் கசிந்து கொண்டே இருப்பதாக ஆறு முறையும் சர்வீஸ் செய்துள்ளனர். ஒவ்வொரு 200 கிலோமீட்டர் ஓட்டும் போதும் பைக்கில் இருந்து ஆயில் கசிந்து கொண்டு இருக்கிறது என வாடிக்கையாளர் கூறினார்.அதேபோல Hero X Pluse பைக் எடுக்கும் பொழுது 45 கிலோமீட்டர் மைலேஜ் கொடுப்பதாக கூறியிருந்த நிலையில் தற்போது வெறும் 20 முதல் 22 கிலோமீட்டர் வரை மைலேஜ் வருவதாக வாடிக்கையாளர் வேதனையும் தெரிவித்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல்  மகன் இப்ரான் பைக்கை தீயிட்டு கொளுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதால் பைக்கை வாங்கிய நிறுவனத்திடம் ஒப்படைத்தார். இது குறித்து மோட்டார் நிர்வாகத்திடமும் மற்றும் ஹீரோ தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று  வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். தனது மகனுக்கு ஆசை ஆசையாய் வாங்கிய பைக்கில் பிரச்சனை ஏற்பட்டு அதற்கு தீர்வு கிடைக்காததால் மனம் நொந்து போன சாகீர் தனக்கு பைக் வேண்டாம் என்று பைக் வாங்கிய நிறுவனத்தில் வாகனத்தை விட்டு விட்டுச் சென்று விட்டார். சுகுணா ஹீரோ நிறுவனத்தில் சர்வீஸ் மேலாளர் செந்தில் குமார் வாடிக்கையாளரிடம் கெஞ்சியும் அதனை மறுத்துவிட்டு பைக் வேண்டாம் என்று கூறி அங்கிருந்து சென்றார்.

From around the web