ஸ்டெர்லைட் ஆலையைத் தரைமட்டமாக்க வேண்டும் - வைகோ ஆவேசம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று தமிழக அரசை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாநகர மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். வீதி தொடங்கி நீதிமன்றம், ஆட்சி மற்றும் அதிகார மையங்கள் வரை எனத் தொடர்ந்து ஸ்டெர்லைட் நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது 'பசுமை காப்பர்' என்ற பெயரில் ஸ்டெர்லைட் நிர்வாகம் தூத்துக்குடிக்குள் நுழைய முயல்வதை வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். பழைய தொழிலையே புதிய பெயரில் மீண்டும் நிலைநிறுத்த நிர்வாகம் முயற்சிக்கிறது. இதனை "பழைய கள்ளைப் புதிய மொந்தையில் ஊற்றுவது போன்ற செயல்" என்றும், "அரிதாரம் பூசிய புதிய அவதாரம்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானிகளின் துணையோடு ஒரு போலி அறிக்கையைத் தயாரித்து, அதன் மூலம் ஆலை மீண்டும் இயங்க அனுமதி கோரி தமிழக முதலமைச்சரையும், நீதிமன்றத்தையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அணுகியுள்ளது. "ஸ்டெர்லைட் எனும் நச்சுப் பூதம் நரித் தந்திரத்துடன் வேறு வடிவில் நுழைய முயற்சிக்கிறது. இந்த ஆலையை அடியோடு அகற்றுமாறு தமிழக அரசை வேண்டுகிறேன்." என வைகோ தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
