வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி அலைகள் ... நெஞ்சை உறைய வைக்கும் காணொளி!

 
venisula

லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த பயங்கர நிலநடுக்கங்களால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் முதலில் 7.1 ஆகவும், பின்னர் சில நிமிடங்களிலேயே 7.5 என்ற அளவுகளிலும் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகி மொரோன் நகரம் மற்றும் தலைநகரான காரகாஸ் ஆகிய பகுதிகளை முற்றிலும் நிலைகுலையச் செய்துள்ளன. ஒரு நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட இந்த   இயற்கை சீற்றத்தால் நாடு முழுவதும்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பயங்கர நிலநடுக்கங்களைத் தொடர்ந்து கடலில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், லா குவைரா கடற்கரைப் பகுதியில் பல அடி உயரத்திற்கு ராட்சத சுனாமி அலைகள் எழுந்து கரையை நோக்கி ஆக்ரோஷமாக வந்துள்ளன. ஆபத்தான எச்சரிக்கை மணிகள் ஒலிக்கப்பட்ட சூழலில், கடலின் கரையையொட்டிய பகுதிகளில் இருந்த படகுகள் அனைத்தும் அலைகளின் வேகத்தில் நிலைதடுமாறி  தத்தளித்தன. இந்த நெஞ்சைப் பதற வைக்கும் பயங்கரமான காட்சிப்பதிவுகள் அடங்கிய காணொளி   சமூக வலைத்தளங்களில்   மத்தியில் காட்டுத்தீயாய் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இவ்வியற்கை பேரழிவால் தற்போதைய அதிகாரப்பூர்வ தகவலின்படி 32 பேர் பரிதாபமாகப் பலியாகியுள்ளனர் மற்றும் 700-க்கும் மேற்பட்ட ஏழை எளிய பொதுமக்கள் படுகாயமடைந்து தீவிரச் சிகிச்சையில் உள்ளனர் என வெனிசுலா பொறுப்பு ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள  பொதுமக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து சவாலாக நீடித்து வரும் நிலையில், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இதுவரை 20-க்கும் மேற்பட்ட வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் முக்கியச் செய்தியாகப் பகிரப்பட்டு வருகிறது