வீடியோ: முடிவுக்கு வந்த இசைச் சகாப்தம்: முழு அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

 
ஆஷா ஆஷா

இந்தியத் திரையிசை உலகின் 'மெல்லிசை அரசி' என்று போற்றப்படும் மூத்த பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்ரல் 12, 2026) காலமானார். அவரது மறைவு இந்திய இசைத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மும்பையில் வசித்து வந்த ஆஷா போஸ்லேவுக்கு நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று அவரது உயிர் பிரிந்தது. லதா மங்கேஷ்கரின் மறைவுக்குப் பிறகு, இசை உலகின் மற்றுமொரு பெரும் தூண் சரிந்தது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


மறைந்த ஆஷா போஸ்லேவின் உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக இன்று (ஏப்ரல் 13) மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் வைக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகைச் சேர்ந்த ஏராளமான கலைஞர்கள் கண்ணீர் மல்க அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு நட்சத்திரங்கள் மற்றும் பாலிவுட் திரையுலகினர் நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.


இசைத் துறைக்கு அவர் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பைப் போற்றும் வகையில், மகாராஷ்டிர அரசு அவருக்கு முழு அரசு மரியாதை அளிக்க உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, காவல்துறையினரின் குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லேவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்பட்டது.


ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை படைத்த ஒரு மகா கலைஞரின் இசைப் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்தது. இருப்பினும், காற்றில் கலந்த அவரது கானக்குயில் குரல் ரசிகர்களின் இதயங்களில் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.