ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்... ஆளுநருக்கு அவசரக் கடிதம்!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரி தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தத் தகவல் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக ஆட்சியைக் கைப்பற்ற விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.

தவெக விஜய்

ஆளுநருக்கு அனுப்பியுள்ள அந்தக் கடிதத்தில், தமிழகத்தில் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள விஜய், தங்களை ஆட்சி அமைக்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், சட்டமன்றத்தில் தங்களது பெரும்பான்மையை நிரூபிக்க 14 நாட்கள் அவகாசம் வழங்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், மீதமுள்ள இடங்களுக்குப் பிற கட்சிகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் இந்த அவகாசம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

தவெக விஜய்

தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டசபை உருவாகும் சூழல் நிலவுவதால், ஆளுநரின் முடிவு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆளுநர் நாளை சென்னை வரவுள்ள நிலையில், விஜய்யின் இந்தக் கடிதம் அரசியல் நகர்வுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. தனிப்பெரும் கட்சியின் தலைவர் என்ற முறையில் விஜய்யை ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைப்பாரா அல்லது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதத்தைக் கோருவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.