திருச்செந்தூர், ஷீரடியைத் தொடர்ந்து விஜய் வேளாங்கண்ணி பயணம்!

 
விஜய் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வரும் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொடர்ச்சியாகப் பல்வேறு ஆன்மீகத் தலங்களுக்குச் சென்று வழிபாடு நடத்தி வருகிறார். கடந்த 28-ம் தேதி அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்ற அவருக்குக் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற விஸ்வரூப தரிசனத்தில் பங்கேற்ற விஜய், மூலவர் மற்றும் சண்முகர் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் சென்று மனமுருகிப் பிரார்த்தனை செய்தார்.

விஜய்

திருச்செந்தூர் பயணத்தை முடித்த கையோடு நேற்று மகாராஷ்டிர மாநிலம் சீரடியில் உள்ள புகழ்பெற்ற சாய்பாபா கோவிலுக்கு விஜய் சென்றார். இதற்காகச் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சீரடி சென்ற அவர், அங்கு சாய்பாபாவைத் தரிசனம் செய்துவிட்டு நேற்று மாலையே சென்னை திரும்பினார். தேர்தல் முடிவுகள் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், விஜய்யின் இந்த அடுத்தடுத்த ஆன்மீகப் பயணங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

இந்தத் தொடர் பயணத்தின் அடுத்த கட்டமாக வரும் மே 2-ம் தேதி விஜய் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் நாகூர் தர்காவுக்குச் செல்ல இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து மதத் தலங்களுக்கும் ஒரே பயணத்தில் செல்வது சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்பட்டாலும், தனது அரசியல் வெற்றிக்காகவே அவர் இந்த வேண்டுதல்களை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவர் நவக்கிரகத் தலங்களுக்கும் செல்ல வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது, இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை.