நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம்!
தலைநகர் டெல்லியில் நாளை மறுநாள் (ஜூன் 11) பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த உயர்நிலைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக நாளை டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். மாநில வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிப்பதற்கான இந்த பயண ஏற்பாடு ஆளும் தரப்பில் முறைப்படி இறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி செல்லும் முதலமைச்சர் விஜய், இந்த 3 நாட்கள் பயணத்தின் போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய மூத்த தலைவர்களை நேரில் சந்தித்துப் பேச வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நெருங்கி வரும் வேளையில், இந்த சந்திப்புகள் தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தவும், பல்வேறு அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிக்கவும் உதவும் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.
முன்னதாக, முதலமைச்சர் விஜய் கடந்த முறை டெல்லிக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட போது, பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை மட்டுமே பிரத்யேகமாகச் சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பில் தமிழகத்திற்கான நிலுவை நிதி மற்றும் சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல் குறித்துப் பேசப்பட்ட நிலையில், இந்த முறை மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்கவிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
