புதுக்கோட்டையில் அதிமுக அலுவலகம் மூடல் - விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் கொதிப்பு!
புதுக்கோட்டை அசோக் நகரில் அமைந்துள்ள அதிமுக அலுவலகம், உட்கட்சி மோதல் மற்றும் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று அதிரடியாக மூடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக தலைமை எடுத்துள்ள சமீபத்திய அதிரடி முடிவே இந்தச் சூழலுக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்து வந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் அந்தப் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக, புதிய மாவட்டச் செயலாளராகப் பழனிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தி அடைந்து தலைமைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட பழனிவேல் கட்சி அலுவலகத்திற்கு வருகை தரும்போது, இரு தரப்பினருக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, அசம்பாவிதங்களைத் தடுக்க அதிமுக அலுவலகம் பூட்டப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலக வளாகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கட்சிக்குள் நிலவும் இந்தத் தீவிரமான உட்கட்சிப் பூசல் காரணமாகப் புதுக்கோட்டை அசோக் நகர் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
